
இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் போது அது பற்றிய பிரிட்டிஷ் பிரதமரின் கருத்து என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட் கேள்வி எழுப்பினார்.
“இலங்கையின் மதிப்பை அனைத்துலக மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி அந்த நாட்டு அரசு எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதி செய்வதற்கு சர்வதேச பக்கசார் பற்ற விசாரணை ஒன்று நடத்தப் படுவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இந்தக் கருத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் உடன்படுகின்றாரா” என்றார் சிவோண் மக்டொனால்ட்.
அதற்குப் பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர், “”இலங்கையில் என்ன நடந்தது என்பதை அறிய எமக்கு ஒரு பக்கசார்பற்ற விசாரணை அவசியம். செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவை குறித்து நாம் பார்க்கிறோம். ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் கூறியவை சரியா என்பதை உறுதி செய்ய ஒரு பக்கசார்பற்ற விசாரணை அங்கு அவசியம்” என்றார்.
இந்த விடயம் குறித்து தான் அங்கம் வகிக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாதா என்று பி.பி.சி செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினர் மக்டொனால்ட்டிடம் கேட்டது. “ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அது சிரமம்” என்று அவர் பதிலளித்தார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தற்போது நடத்தி வரும் விசாரணையின் மூலம் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உறுதி செய்ய முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அந்த விசாரணை பக்கசார்பற்ற வகையில் நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் சிவோண் மக்டொனால்ட் கூறினார்.
No comments:
Post a Comment